கிழக்கு சிரியாவில் யூப்பிரட்டீஸ் நதிக்கரையோரத்தில் அமைந்துள்ள ISIS இன் கடைசி முக்கிய நகரான டேய்ர் எல் ஸோரினைப் பல மாத கடும் முற்றுகைப் போருக்குப் பின்னர் கைப்பற்றி இருப்பதாக சிரிய படைகள் அறிவித்துள்ளன. சிரியாவில் ISIS இன் பிடியிலுள்ள நகரங்களைக் கைப்பற்ற குர்துப் படைகளின் ஆதரவுடனும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச வான் படைகளின் ஆதரவுடனும் சிரிய அரச இராணுவம் தொடர்ச்சியாகப் பல வருடங்களாகப் போரில் ஈடுபட்டு வருகின்றது.
இதுதவிர அங்கு அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான அரசை அகற்றுவதற்காகவும் போராளிக் குழுக்கள் போராடி வருகின்றன. இவர்களுக்கு எதிராகவும் சிரிய அரசுக்கு ஆதரவாகவும் ரஷ்யா வான் வழித் தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த இரு வகையிலான போராட்டத்துக்கும் இதுவரை 3 இலட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் பலியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் அண்மையில் சிரியாவில் எண்ணெய் வளம் மிக்க பகுதியான டேய்ர் எல் ஸோர் மாகாணத்தைக் கைப்பற்றி இருப்பதாக சிரிய ஊடகங்கள் இன்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
பல வாரங்களாக இடம்பெற்ற டேய்ர் எல் ஸோருக்கான போரில் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சுமார் 3.5 இலட்சம் பொது மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருந்த நிலையில் தற்போது ISIS இன் புகலிடங்களில் இருந்து அவர்களை வெளியேற்றி தஞ்சம் அளித்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் பிரிட்டனைத் தளமாகக் கொண்டு சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இதனை உறுதிப் படுத்தியுள்ளது.
கடந்த மாதம் தான் அமெரிக்க தலைமையிலான கூட்டணி நாடுகளின் வான் வழித் தாக்குதல் உதவியுடன் ரக்கா நகரினைக் கைப்பற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டேய்ர் எல் ஸோர் மாகாணத்தின் சில பகுதிகள் மாத்திரம் ISIS வசம் உள்ளது எனவும் தெரிய வருகின்றது.
Home
»
World News
»
ISIS இன் கடைசி முக்கிய நகரான டேய்ர் எல் ஸோர் ஐக் கைப்பற்றியுள்ளதாக சிரிய படைகள் அறிவிப்பு
Saturday, November 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment