‘எஸ்.எம்.ஜீ’ மற்றும் ‘கோபு’ என்று அழைக்கப்படும் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம், மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை காலமானார். இறுதிக் கிரியைகள், மட்டக்களப்பு பூம்புகார் 4ஆம் குறுக்கிலுள்ள அவரது மகளின் வீட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம், கன்னாதிட்டியில் 1930.10.03இல் பிறந்து பெருமாள் கோயிலடியில் வாழ்ந்த கோபலரத்தினம், தனது ஆரம்ப கல்வியை சேணிய தெரு சன்மார்க்க போதனா துவிபாசா பாடசாலையிலும், பின்னர் இராமகிருஷ்ண மிஷன் யாழ்.வைதீஸ்வரா கல்லூரியிலும் கற்றார். சில மாதங்கள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திலும் கற்றுள்ளார்.
இலங்கையின் வீரகேரியில் தொடங்கி, ஈழநாடு, ஈழமுரசு, காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், தினக்கதிர், சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் எஸ்.எம்.கோபாலரத்தினம் பணியாற்றினார்.
2002ஆம், 2004ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி பிரான்ஸ், லண்டன் முதலிய ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று திரும்பிய அவர், அங்கு எழுத்தாளர் சங்கங்களின் வரவேற்றுகளையும் பெற்றார். அரை நூற்றாண்டுக்கு மேல் பத்திரிகையையே வாழ்வாக்கிக் கொண்டிருந்த அவர், பத்திரிகைத்துறையில் பல வாரிசுகளை உருவாக்கித்தந்தவர்.
எஸ்.எம்.கோபாலரத்தினத்தின் அரை நூற்றாண்டு கால பத்திரிகைப்பணியைப் பாராட்டி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர், 2004ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி தேசியச் சின்னம் பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவித்திருந்தார். அவர், பத்திரிகையாளர் என்பதற்கு அப்பால், ஸ்ரீ ரங்கன் என்ற பெயரில் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
எஸ்.எம்.ஜீ.பாலரெத்தினம், ஊர் சுற்றி எனப் பல பெயர்களிலும் திரை விமர்சனம், இசை விமர்சனம், நூல் விமர்சனம், என அவர் பல விடயங்களையும் எழுதியுள்ளார். அரசியல் கட்டுரைகள், பொதுக்கட்டுரைகள் என ஆயிரக்கணக்கில் எழுதியுள்ள எஸ்.எம்.ஜீ., “ஈழ மண்ணில் ஓர் இந்தியச்சிறை”, “அந்த ஓர் உயிர்தானா உயிர்”, “பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு”, “ஈழம் முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு” ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
Wednesday, November 15, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment