மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட கடன்களை மீளச் செலுத்த 2019ஆம் ஆண்டு 3.2 ட்ரில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வெளிநாட்டுச் செலாவணி சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற பின்னர் பல்வேறு குப்பைமேடுகளைத் தனது தோள்களில் சுமக்கவேண்டி ஏற்பட்டது. சர்வதேச அரங்கிலிருந்து மனித உரிமைப் பிரச்சினை, பாரிய கடன்சுமை, ஊழல் மோசடி, குப்பைப் பிரச்சினை என பல்வேறு குப்பைமேடுகளை சுமக்கவேண்டி ஏற்பட்டது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது. எனினும், ராஜபக்ஷ குடும்பத்தில் வீடு வாங்கியமை, கறுப்புப் பணப் புழக்கமென 3.1 பில்லியன் ரூபா பெறுமதியான மோசடி குறித்த தகவல்கள் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. எனினும் வெளிநாட்டில் மறைத்துவக்கப்பட்ட நிதி தொடர்பான விபரங்களைப் பெறமுடியாதுள்ளது.
நாட்டின் கடன்சுமைகளுக்காக இந்த வருடத்தில் அரசாங்கம் 2085 மில்லியன் டொலர்களைச் செலுத்தியுள்ளது. இதில் 72 வீதம் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்கான கொடுப்பனவாகும். 2019ஆம் ஆண்டாகும்போது வருடத்துக்கான கடன் மீள் கொடுப்பனவுக்காக 3.2 ட்ரில்லியன் ரூபா தேவைப்படுகிறது. இதில் 82 வீதமானது கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெறப்பட்டதாகும். இது வருமானத்தைவிட மூன்று மடங்கு அதிகமானதாகும்.
2020ஆம் ஆண்டாகும் போது 3752 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தவேண்டியிருக்கும். 2022ஆம் ஆண்டு தலையைத் தூக்க முடியதாளவுக்கு கடன்பெறப்பட்டுள்ளது. சுமனதாச சொன்னமைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி தேர்தலை முற்கூட்டியே நடத்தினார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் ஏகாதிபத்திய ஆட்சியை ஏற்படுத்துவதும், சர்வதேச நாடுகள் பொருளாதார தடைகளைக் கொண்டுவரும்போது நாட்டு மக்களை ஒடுக்கி அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதென்றும் மஹிந்த திட்டமிட்டிருந்தார்.
எனினும், ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டு நாடு பொருளாதார நிலைமையில் முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் எமது நிதி நிலைமைகளின் பலத்தை அறிந்து உதவி வருகிறது.
இவ்வாறான நிலையிலேயே வெளிநாட்டுச் செலாவணியை தாராளமயப்படுத்தும் வகையிலான சட்டத்தை அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. இதனூடாக வெளிளிநாட்டு மூலதன முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவர முடியும். இச்சட்டத்தின் மூலம் வரி ஏய்ப்புக்கள் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றத்தை கட்டுப்படுத்த முடியும்.” என்றுள்ளார்.
Home
»
Sri Lanka
»
மஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில்லியன் ரூபாய் தேவை: மங்கள சமரவீர
Wednesday, July 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment