இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்போது, தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதமருடன் விவாதிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இடம்பெறும் சர்வதேச வெசாக் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நாளை வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளார். அவருக்கு, விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ள மோடி, வெள்ளிக்கிழமை மலையகத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று பின்னர் இந்தியாவிற்கு திரும்புவதற்கு முன்னர் மாலை 03.00 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.
இச்சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் கட்சியின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
Thursday, May 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment